திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே புலிகாட் ஏரியில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தமிழக மீனவக் கிராமங்களைச் சூறையாடி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 120-க்கும் மேற்பட்ட ஆந்திர மீனவர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.
பழவேற்காடு அருகே சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ‘புலிகாட் ஏரி’ (பழவேற்காடு ஏரி) அமைந்துள்ளது. இந்த ஏரியை வாழ்வாதாரமாகக் கொண்டு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாட்டைக்குப்பம், புதுக்குட்டி உள்பட 24 மீனவக் கிராம மக்களும், தமிழகப் பகுதியைச் சேர்ந்த சின்னமாங்கோடு, பெரிய மாங்கோடு, புதுக்குப்பம் உள்பட 12 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இரு மாநில மீனவர்களுக்கும் இடையே எல்லை தாண்டி மீன்பிடிக்கும் பிரச்சினை பல காலமாகவே நீடித்து வந்தது.

2014-ல் வெடித்த பயங்கரக் கலவரம்
கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆந்திர மீனவர்கள் தமிழக எல்லையான சின்னமாங்கோடு பகுதியில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துள்ளனர். இதற்குச் சின்னமாங்கோடு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. இம்மோதலில் ஆந்திர மீனவர்கள் 3 பேர் காயமடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த ஆந்திர மீனவர்கள் தங்களது எல்லைப் பகுதியில் கொடி ஏற்றினர். ஆபத்தை உணர்ந்த சின்னமாங்கோடு மற்றும் பெரியமாங்கோடு கிராம மக்கள் அன்று இரவே உயிர்பயத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
வீடுகள், படகுகள் தீக்கிரை – போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
இதனைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக எல்லைக்குள் புகுந்த ஆந்திர மீனவக் கும்பல், சின்னமாங்கோடு மற்றும் பெரியமாங்கோடு கிராமங்களைச் சூறையாடி அராஜகத்தில் ஈடுபட்டது. அங்கிருந்த வீடுகள் மற்றும் படகுகளுக்குத் தீ வைத்ததில், சுமார் 50 வீடுகளும், 100-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளும் எரிந்து சாம்பலாகின. கலவரத்தைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரிகள் மீது அக்கும்பல் ஈட்டிகளாலும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் போலீஸ் வாகனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன், மேலும் 2 போலீஸ் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரக்காரர்களைச் சமாளிக்க முடியாமல் திணறிய போலீசார், கூட்டத்தைக் கலைக்க வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருப்பினும், ஆந்திர மீனவர்கள் நடத்திய ஈட்டித் தாக்குதலில் அப்போதைய ஏ.டி.எஸ்.பி (ADSP) ஸ்டாலின், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் (Inspector) ராஜா ராபர்ட் உட்பட 7 போலீசார் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கு
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கலவரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கலவரத்தில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த 132 மீனவர்களைக் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை முதற்கட்டமாகக் கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தற்போது ‘திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு’ மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணைக்காக இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆந்திர மீனவர்கள் நீதிமன்றத்தில் திரண்டதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுப் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
