பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டாபர் நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிராக விளம்பரங்களை வெளியிட்டு வந்தது. டாபர் நிறுவனத்தின் தயாரிப்பை இழிவுபடுத்தும் வகையிலும், தரக்குறைவானது என்றும் விளம்பரத்தில் சித்தரிப்பு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டாபர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பிய பிறகும் கூட ஒரே வாரத்தில் 6,182 விளம்பரங்களை டாபர் நிறுவனத்திற்கு எதிராக வெளியிட்டதாக அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். டாபர் தயாரிப்பில் 47 ஆயுர்வேத மருந்துகள் மட்டுமே உள்ளன என்றும் ஆனால் பதஞ்சலி தயாரிப்பில் 51 மருந்துகள் உள்ளதாகவும், அதுவே சிறந்தது என்கிற வகையில் ஒப்பீடு செய்து விளம்பரம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது, இது தங்களது தயாரிப்பை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவன விளம்பரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்ட டெல்லி நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
