அரசியல் நாகரிகம் என்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் முக்கிய அடையாளமாகும். கருத்து வேறுபாடுகளை கொள்கை அடிப்படையில் விவாதிப்பதே அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தும். அதற்கு மாறாக, தனிநபர் விமர்சனங்களும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களும் அரசியல் முதிர்ச்சியின்மையையும் ஜனநாயக மதிப்பீடுகளில் உள்ள பலவீனத்தையும் பிரதிபலிக்கின்றன.


ஜனநாயக அரசியல் களத்தில் வெற்றிகளும் தோல்விகளும் நிரந்தரமற்றவை. தேர்தல் களம் என்பது கொள்கை ரீதியான விவாதங்களுக்கும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் ஒப்பீட்டிற்குமான ஒரு தளமே தவிர, தனிநபர் விமர்சனங்களுக்கும் தனிப்பட்ட அவமதிப்புகளுக்கும் அங்கு இடமிருக்கக் கூடாது.
அரசியல் முதிர்ச்சியும் நாகரிகமும் கொண்ட ஒரு ஜனநாயகத்தில், ஒரு தலைவரின் தற்காலிகத் தோல்வியையோ அல்லது ஒரு தொகுதியின் முடிவையோ மட்டும் வைத்து அவரது ஒட்டுமொத்த அரசியல் உழைப்பையும், ஆளுமையையும் குறைத்து மதிப்பிடு செய்வது என்பது அரசியல் முதிர்ச்சி இல்லாத மனிதர் என்பதை முதல்வர் ஜோசப் விஜய் நிரூபித்துள்ளார்.
1962ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் நிறுவனரான பேரறிஞர் அண்ணா காஞ்சீபுரம் தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனால், அந்தத் தோல்வி அவரது ஆளுமையையோ, தமிழக அரசியலில் அவரது தேவையையோ குறைத்துவிடவில்லை. அதே அண்ணா அவர்கள் 1967-ல் பெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
தமிழக அரசியலில் மிக நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்த கலைஞர் அவர்கள், அரசியல் நாகரிகத்திற்குப் பல உதாரணங்களை அமைத்துள்ளார். மாற்றுக்கட்சியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், சட்டமன்ற அவையின் மாண்பைக் காப்பதிலும், மூத்த தலைவர்களுக்கு மரியாதை அளிப்பதிலும் அவர் என்றும் தவறியதில்லை.

1996 பொதுத்தேர்தலில் பர்கூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தோல்வியடைந்தார். ஆனால், அந்தத் தோல்வி தற்காலிகமானது என்பதை நிரூபிக்கும் வகையில், பின்னர் மீண்டும் பெரும் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து பல ஆண்டுகள் தமிழகத்தை வழிநடத்தினார்.
இப்படி உலகம் முழுவதும் உதாரணங்கள், வரலாற்று சம்பவங்கள் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற உலகப் புகழ்பெற்ற தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில். ஆனால், போர் முடிந்த உடனேயே 1945-ல் நடந்த பொதுத்தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது; அவர் பிரதமர் பதவியை இழந்தார். மக்கள் அவரது போர்க்கால உழைப்பை மறக்கவில்லை, ஆனால் நாட்டின் அப்போதைய தேவை வேறாக இருந்தது. பின்னர் 1951-ல் அவர் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட இந்திரா காந்தி அவர்கள், 1977 பொதுத்தேர்தலில் ரேபரேலி தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனால், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட அவர், கடுமையான உழைப்பிற்குப் பின்னர் 1980-ல் மீண்டும் நாட்டின் பிரதமராகப் பிரம்மாண்டமாகப் பொறுப்பேற்றார்.
ஜனநாயகத்தின் மாண்பு
தேர்தலில் ஒரு தொகுதியில் ஏற்படும் தோல்வி என்பது அந்தத் தருணத்தில் நிலவிய அரசியல் சூழல், கூட்டணிக் கணக்குகள் மற்றும் மக்களின் ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்கான மனநிலை ஆகியவற்றைப் பொறுத்ததே ஆகும்.
”அரசியலில் நாகரிகமான விவாதங்களும், மாற்றுக் கருத்துடைய தலைவர்களுக்கும் உரிய மரியாதையை அளிக்கும் பண்பும்தான் ஒரு சிறந்த ஜனநாயகத்தின் அடையாளம்.”
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழக அரசியலில் அடிமட்டத் தொண்டராகத் தொடங்கி, மேயர், அமைச்சர், துணை முதல்வர் மற்றும் முதல்வர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து மக்கள் பணியாற்றியவர். எனவே, ஒரு தேர்தலின் முடிவை மட்டும் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற அவைகளில் தனி நபர் விமர்சனங்களை வைப்பது ஆரோக்கியமான அரசியல் நெறிமுறைகளுக்கு உகந்ததாக இருக்காது. விவாதங்கள் எப்போதும் மக்கள் நலன் சார்ந்ததாக மட்டுமே அமைவதே அவையின் மாண்பைக் காக்கும்.
