பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட மலை பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மழை காரணமாக குன்னூர் மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகள் சேதமடைந்ததுடன், சாலைகளிலும் பாறைகள் விழுந்து போக்கவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர்,தன்னார்வலர்கள் ஆகியோர் உதவியுடன் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய காலை நிலவரப்படி, நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 137 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் கெத்தை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மேட்டுப்பாளையம் – மஞ்சூர் இடையேயான போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக, மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் பாறைகள் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதை சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், நிலைமை சீராகும் வரை சேவை மீண்டும் தொடங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்துவருவதால், மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேவையில்லாமல் மலைப்பாதைகளில் பயணிக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.