
அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்த நிலையில், அடுத்தது என்ன நடக்கும்? சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!
கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.75 கோடி சொத்து குவித்ததாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்தது. இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் என்பவர், தாமாக முன்வந்து அமைச்சர் பொன்முடியின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கை அவர் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பின்னர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இவ்வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், டிசம்பர் 19- ஆம் தேதி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என்றும், தண்டனை விவரங்கள் டிசம்பர் 21- ஆம் தேதியான இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அத்துடன், பொன்முடி 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (டிச.21) காலை 10.00 மணிக்கு ஆஜராகினர். அதைத் தொடர்ந்து, நீதிபதி தண்டனை விவரங்களை வாசித்தார்.
அமைச்சர் பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைப்பு!
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தண்டனை விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி தரப்பு, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்த நிலையில், அடுத்தது என்ன நடக்கும்? சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தண்டனை விவரங்கள் தமிழக சட்டப்பேரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகளின் படி தகுதி இழப்பு அறிவிப்பாணையை பேரவை செயலகம் வெளியிடும். சட்டப்பேரவை செயலகத்தின் அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு தகுதி இழப்பு நடைபெறும்.
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை!
தகுதியிழப்பு பின் திருக்கோவிலூர் தொகுதி காலி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டதில் இருந்து சுமார் 6 மாதத்திற்குள் திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.