
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டுமென வேண்டிக்கொள்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்புச்சளி, இருமல் இருந்ததால் தேவைப்படும் நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் வெளியான செய்திக்கு முதலில் தேமுதிக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்தது.
கேப்டன் விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் அறிக்கை வெளியிட்டது. செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. அதேபோல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் அவரது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 12 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் இந்தநிலையில் இன்று( நவ 29) மருத்துவனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை பலரையும் வருத்தமடையச் செய்துள்ளது. அதில், கடந்த 24 மணிநேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும், இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதாவும் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து தலைவர்கள், பிரபலங்கள் பலரும் கேப்டன் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டுமென அக்கறை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலையடைந்தேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். இந்த இக்கட்டான காலத்தில் அவரது குடும்பத்திற்கு எனது அன்பையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.