விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோருக்கு 7 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி மாணவி லியா லெட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக தனியார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி மற்றும் வகுப்பு ஆசிரியை ஏஞ்சல்ஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஆசிரியை ஏஞ்சலுக்கு கவனக் குறைவு காரணமாகவும், சந்தேக மரணம் என்ற அடிப்படையிலும் 7 நாள் நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, தனியார் பள்ளியின் தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோமினிக் மேரி ஆகியோர் வயது முதிர்வு காரணமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்ட நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களிடம் நீதிபதி சத்தியநாராயணன் நேரில் விசாரணை மேற்கொண்டு 7 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இருவரும் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். இதனை அடுத்து, எமில்டா, டோமினிக் மேரி ஆகியோரை போலீசார் சிறைக்கு அழைத்துசென்றனர்.