தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் புரவிபாளையம் கிராமத்தில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக அதன் உரிமையாளர் கே.டி.செந்தாமரை என்பவருக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதிக்கபட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தாமரை தான் அனைத்து விதமான சுற்றுச்சூழல் அனுமதிகளையும் பெற்ற பின்னரே குவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என மனுதார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் மனுதாரருக்கு குவாரியை நடத்த உரிமை எதுவும் இல்லை. மனுதாரரின் குவாரி உரிமம் 2023-ம் ஆண்டே முடிந்து விட்டதால், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகையை அவரிடம் இருந்து வசூலிக்கப்படும் என கூறப்பட்டது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பின்பு இந்த வழக்கு விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறுகையில்,” சம்மந்தப்பட்ட குவாரிகளில் இருந்து கற்கள், கிராவல் மண் எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளன? என்ற அட்டவணையே அரசு தாக்கல் செய்யதுள்ளது அந்த விவரங்களை மனுதாரர் எதிர்க்கவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமே, நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றுவதற்காகத்தான் கொண்டு வரப்பட்டது ஆனால், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அந்த துறை ஆணையரின் செயல் இந்த வழக்கில் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பது வேதனை அளிக்கிறது.
உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, குவாரியை மூடி விட்டதாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்து விட்டு, மறுபுறம் குவாரியை செயல்பட அனுமதித்துள்ளனர். சுற்றுச்சூழல் துறை ஆணையரின் இந்த உத்தரவு மக்களையும், அரசையும் ஏமாற்றும் விதமாகவும், மோசடியாகவும் உள்ளது. சட்டப்படி ஒட்டுமொத்த அபராத தொகையையும் மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும். மனுதாரரின் குவாரி உரிமம் 2023-ம் ஆண்டே முடிந்து விட்டதால், அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
இந்த வழக்கில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் எடுத்துள்ள நடவடிக்கையை பாராட்டுகுறியது. மேலும், குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.