Homeசெய்திகள்தமிழ்நாடுசாம்சங் தொழிலாளர் போராட்ட விவகாரம்: மேலாளர்களுடன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆலோசனை

சாம்சங் தொழிலாளர் போராட்ட விவகாரம்: மேலாளர்களுடன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆலோசனை

-

- Advertisement -

சாம்சங் நிர்வாகத்தினரும், அதன் ஊழியர்களும் இணைந்து அனைத்து தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் மற்றும் சாம்சங் நிர்வாகத்தினர் இடையிலான பேச்சு வார்த்தையில் உடன் எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணமாறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.ராஜா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர்  சி.வி.கணேசன் ஆகியோருக்கு அறிவுறுத்தினார். அதன் பேரில் அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிருந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் சாம்சங் நிறுவன மேலாளர்கள் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின்போது தொழிலாளர்களின் போராட்டம் குறித்தும்,  கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி, இன்று காலை சாம்சங் நிறுவன மேலாளர்களுடனான சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கப் பயனுள்ள உரையாடலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.  மேலும், சாம்சங் நிர்வாகத்தினரும்,  ஊழியர்களும் இணைந்து, அனைத்து தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என உறுதியுடன் நம்புவதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டுள்ளார்.

MUST READ