கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுக்கவும், கைதாகி இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனினும் மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைகள் தொடர்ந்துபடி உள்ளது.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 14 மீனவர்கள் இன்று காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.