மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு முதல்வர் தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியை தருகிறது. முதல்வர் இன்று ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் பாதுகாப்பாளராக செயல்பட்டு வருவது பெருமையாக உள்ளது என சங்க தலைவர்கள் தங்களது பாராட்டை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில் நுட்பம், தொழில்நுட்ப உபகரணங்களை அளித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம், மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் ரூ.576.73 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதற்கு மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் நாகை ராஜேந்திர நாட்டார்: மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு முதல்வர் தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறார். தொழில்நுட்ப பயிற்சியுடன் தேவையான உபகரணங்கள் அளித்து மீன் தொழிலில் ஈடுபட 7 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.52.33 கோடியில் சிறப்பு திட்டம், கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு பதப்படுத்தி விற்பனையில் ஈடுபடும் தொழில் மேற்கொள்ள ரூ.25.82 கோடி மதிப்பில் உபகரணங்கள், தொழில் நுட்ப உபகரணங்கள் அளித்தல் மற்றம் பயிற்சிகள் வழங்க ரூ. 9.90 கோடி ஒதுக்கீடு, மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருட்களை தயார் செய்ய ரூ.20.35 கோடி நிதி ஒதுக்கீடு என மீனவர்களுக்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக உள்ளது.
அதே நேரத்தில் ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் மீனவர்களின் கோரிக்கையை புறக்கணிக்கின்றனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. ஆனால் தமிழக மீனவர்கள் சிறை தண்டனை அனுபவித்த பின்னரே விடுவிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜுதீன்: மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் வலைகளை அறுத்து சேதப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக பெருங்கடல் நோக்கி செல்லும் வகையில் தங்கச்சி மடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மீனவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. எல்லா காலங்களிலும் மீன்பிடி தொழில் லாபகரமாக இல்லாததை கணக்கில் கொண்டு தொலை நோக்கு பார்வையோடு மீனவர்களுக்கு மீன்வளம் சாராத தொழில் வாய்ப்புகளை உருவாக்க சுற்றுலா படகு இயக்குதல், கைவினை, பொருட்கள் தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வயதான, உடல் உழைப்பில் அதிகம் ஈடுபட முடியாத மீனவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
திருவாரூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் யூனியன் தலைவர் முத்துப்பேட்டை தில்லைவிளாகம் யோகநாதன்: தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியை தருகிறது. முதல்வர் இன்று ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் பாதுகாப்பாளராக செயல்பட்டு வருவது பெருமையாக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இயற்கை வளம், மீன் வளம் ஆகியவைகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் இந்த பகுதியை மீனவ சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த நிலையில் தமிழக முதல்வரின் இந்த சிறப்பு அறிவிப்பு எங்களுக்கு ஆறுதலை தருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு திட்டமும் அமைந்துள்ளது.
மோடியின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல – செல்வப்பெருந்தகை தாக்கு