spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆனைமுத்து நூற்றாண்டை கொண்டாட வேண்டியது சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரின் கடமை - அன்புமணி

ஆனைமுத்து நூற்றாண்டை கொண்டாட வேண்டியது சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரின் கடமை – அன்புமணி

-

- Advertisement -

சென்னையில் வரும் 21-ஆம் தேதி பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா அவர்களின் நூற்றாண்டு விழாவை, வரலாற்று சிறப்புமிக்க அந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டியது சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகும் என அன்புமணி கூறியுள்ளாா்.ஆனைமுத்து நூற்றாண்டை கொண்டாட வேண்டியது சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரின் கடமை - அன்புமணி

பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தவரும், சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவருமான பெரியாரின் பெருந்தொண்டர் வே. ஆனைமுத்து அய்யா  அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு வரும் 21-ஆம் தேதி நிறைவடைகிறது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டியது சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகும்.

we-r-hiring

ஒரு நூற்றாண்டுக்கு முன் 1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21-ஆம் நாள் பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி எனும் கிராமத்தில் மிகவும் சாதாரணமான உழவர் குடும்பத்தில் பிறந்த அவர், தமது 20ஆம் வயதிலேயே பொதுவாழ்வுப் பயணத்தைத் தொடங்கினார். தந்தை பெரியாரின் தலைமையை ஏற்ற அவர், 30-ஆம் வயதில் பொதுவாழ்க்கையில் தம்மை முழுநேரமும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செய்து வந்த பணியிலிருந்து விலகினார். வர்ணாசிரமத்தை பாதுகாக்கும் வகையிலான அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளை தீயிட்டு எரித்ததற்காக 32-ஆம் வயதில் 18 மாத சிறை தண்டனையை அனுபவித்தார். அப்போது தொடங்கிய அவரது தியாக வரலாறு கடைசி மூச்சு இருக்கும் வரை தொடர்ந்தது.

திராவிடர் கழகத்தில் சேர்ந்த சில காலத்திலேயே, அவர் நிகழ்த்திய மேடைப் பேச்சைக் கேட்டு வியந்து போன பெரியார், ஆனைமுத்து அய்யாவை பேரறிஞர் என்று அழைத்துப் பெருமைப்படுத்தினார். அதுமட்டுமின்றி, தந்தை பெரியார் திருச்சிக்கு வரும்போதெல்லாம் மாலை நேரங்களில் ஆனைமுத்து அய்யாவுடன் கொள்கை குறித்து உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். பெரியாரின் பணிகள் குறித்தும், கொள்கைகள் குறித்தும் வெளியுலகுக்கு பெரிதாக தெரிந்திராத காலத்திலேயே பெரியாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில்  தந்தை பெரியாரின் உரைகள், கட்டுரைகள், தலையங்கங்கள் ஆகியவற்றை 3 தொகுப்புகளாக தொகுத்து வெளியிட்டார். பெரியாரின் பணிகளை மக்களிடம் கொண்டு செல்ல அவை பெரிதும் உதவின. பின்னாளில் பெரியாரின் சிந்தனைகள் நூலை விரிவுபடுத்தி 20 தொகுப்புகளாக்கி வெளியிட்டவரும் அவர் தான்.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப் படுவதற்கு காரணமும் அவர் தான். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு, இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த மண்டல் ஆணையம் அமைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவரும் அவர் தான். மண்டல் ஆணையத்திற்கு பல வழிகளில் உதவிய அவர், அதற்காகவும், ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தவும் சரண்சிங், மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, வி.பி.சிங் ஆகிய பிரதமர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அவரது முயற்சிகளால் தான் மத்திய அரசு வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது.

அதன்பிறகும் கூட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு, கிரீமிலேயர் முறை நீக்கம், இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு நீக்கம் ஆகியவற்றுக்காக தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை உழைத்தார். அவரது கனவுகளில் ஒன்றான மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் சாத்தியமாக்கினார்.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட பெரியவர் ஆனைமுத்து அய்யா அவர்களையும், அவரது பணிகளையும் தமிழ்நாட்டு மக்களும், தமிழக அரசும் அங்கீகரிக்கவில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும். ஆனைமுத்து அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு மாணவர்களுக்கு பாடமாக்கக்கூடிய தகுதியுடையது; ஆனால், அது பாடமாக்கப்படவில்லை. அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படவில்லை. வே. ஆனைமுத்து அவர்களில் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும், அவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு அரசே கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையும் திமுக அரசால் இதுவரை ஏற்கப்படவில்லை.

பெரியவர் ஆனைமுத்து அவர்களின் பணிகளையும், தியாகத்தையும் அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதன் மூலம் தான் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்; அது சமூகநீதி பேசும் அமைப்புகளின்  கடமை என்று  கருதுகிறேன். அதற்கு செயல்வடிவம் தரும் வகையில் அவரது நூறாவது பிறந்தநாளான வரும் ஜூன் 21-ஆம் நாள் சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில்  பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை நடத்துகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான எனது தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பெரியவர் ஆனைமுத்து அவர்களின் குடும்பத்தினர், அவரது கொள்கை வழித்தோன்றல்கள், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன் என அறிவித்துள்ளாா்”.

எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…

MUST READ