சென்னை பெரம்பூரில் தாய் கண் முன்னே பள்ளிச் சிறுமி தண்ணீர் டேங்கர் லாரியில் அடிபட்டு நேற்று உயிரிழந்தாா். இதனால் போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த யாமினி தன்னுடைய 10 வயது சிறுமி சௌமியாவை பள்ளியில் விடுவதற்காக பேப்பர் மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சென்னை பெரம்பூர் வீனஸ் அருகே சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி ஒன்று யாமினி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி சம்பவ இடத்தில் 10 வயது சிறுமி இறந்தாா். இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காவல் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், போக்குவரத்து மிகுந்த நேரத்தில் பொது பாதையில் லாரியை இயக்க அனுமதியளித்ததால், போக்குவரத்து காவல் உதவி ஆணையா் சத்தியமூர்த்திக்கு 17(அ) வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1976-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உயா் அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சம்பள உயர்வு தற்காலிக நிறுத்தம் அல்லது பதவி இறக்கம் என இரண்டில் ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் போக்குவரத்து காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மேலும், பெரம்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுடலை மணி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆணையர் அளித்த விளக்கத்தை சென்னை காவல்துறை ஆணையர், தமிழக அரசின் உள்துறைக்கு அனுப்புவார்.