நாட்டில் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்துள்ளனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் “டிஜிட்டல் அரெஸ்ட்” தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அக்டோபர் 27 ஆம் தேதி தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் வழக்கு குறித்து மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் சிபிஐ மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் ஒரு நகலை மட்டும் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞரிடம் வழங்கியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் சீலிட்ட அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள விபரங்கள் மிகவும் பாதுகாப்பானது என்பதால் அதனை பொது வெளியில் வெளியிட முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்விவகாரத்தில் பொருத்தமான வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட உள்ளதாக நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த போது மத்திய உள்துறை அமைச்சகம் இதற்காக தனி பிரிவை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதுவரை டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 3,000 கோடி ரூபாய் அளவுக்கு திருடப்பட்டுள்ளது என்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய நீதிபதிகள், இதில் பெரும்பாலும் சிக்குபவர்கள் வயதான நபர்கள் என்பதை அறிய முடிந்ததாகவும் வேதனை தெரிவித்தனர். டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற விவகாரங்கள் நம் நாட்டில் மட்டுமே நடைபெறும் நிலையில் கடுமையான உத்தரவுகளை இந்த விவகாரத்தில் பிறப்பிக்காவிட்டால் இது பெரும் பிரச்சனையாகிவிடும்.
மேலும் இது இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய விவகாரம் என்பதால் இதில் உரிய உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக வழக்கை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
3 கோடி மோசடி…இன்ஸ்டா பிரபலம் மீது ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரால் பரபரப்பு…


