ஆவடி அருகே கீழ்கொண்டையார் பகுதியிலிருந்து ஆவடியை நோக்கித் தடம் என் 120E ,அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது பேருந்தை வீராபுரம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் சதீஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஆட்டோ ஒன்று பேருந்தை முந்திச் செல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது , முந்திச் செல்ல முடியாததால் வழிவிடவில்லை என்ற ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர் திடீரெனப் பேருந்தில் ஏறிப் பேருந்து ஓடும் போதே ஓட்டுநர் சதீஷை சரமாரியாகத் தாக்கி உள்ளார்.

இதில் நிலை தடுமாறிய ஓட்டுநர் ஆவடி பேருந்து பணிமனையை நெருங்குவதற்கு முன்பு அண்ணா சிலை அருகே சாலையின் பக்கவாட்டில் நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று கார்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்படுத்திப் பேருந்து நின்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பொதுமக்கள் யாரும் விபத்தில் சிக்கவில்லை. விபத்து ஏற்பட்டதை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் தப்பி ஓடி உள்ளார். பேருந்து ஓட்டுநர் மது போதையில் விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் பேருந்தை சூழ்ந்து கொண்டனர். இதனை அடுத்து விவரம் தெரிந்ததை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் தாக்கியதில் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் ஆவடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது ஆவடி அருகே கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இரவோடு இரவாக அவரை கைது செய்த ஆவடி போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஓட்டுநரை தாக்கியது ஒப்புக்கொண்டார்.
மேலும் பேருந்தை முந்தி செல்ல முயற்சித்தபோது பேருந்து ஆட்டோ மீது மோதுவது போல் வந்ததால் ஆத்திரமடைந்து ஓட்டுநரை தாக்கியதாக கைதான ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது அரசு ஊழியரை தாக்கியது பொது சொத்தை சேதப்படுத்தியது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.