நீரை மகேந்திரன்
இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய நோய் பிடித்த சமூகத்தில், சமூகநீதிக்கான போராட்டம் என்பது சவாலானதுதான். அதுவும் கடந்த நூறாண்டில், இந்திய துணைக் கண்ட அளவில் தெற்குப் பகுதியில் மட்டும்தான் மிகத் தீவிர மாக ஆரிய சனாதனத்துக்கு எதிராக அரசியலாகவும் பண்பாடாகவும் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டு, சமகாலத்தில் ஒரு நிலையான இடத்துக்கு நகர்ந்துள்ளோம்.ஒப்பீட்டளவில், தமிழ்நாட்டில் இந்த நகர்வு என்பது இதர பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் என்பதும், சமூக மாற்றத்துக்கான பணிகளில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் நாம் அறிவோம். அந்தப் பயணத்தில் அரசியல் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கும், அதன் அரசதிகாரமும் எவ்வளவு தூரத்துக்குப் பயன்படும் என்பதையும் விளங்கிக் கொள்வதில் சில பார்வைகளையும் மாற்றுக் கருத்துகளையும் முன்வைத்து, முழு முற்றாக தி.மு.கவை நிராகரிக்கும் இடத்துக்குச் செல்கின்றனர் சிலர்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் எனில், தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது என்பதுபோல, சில சாதி ரீதியிலான தாக்குதல் சம்பவங்களை வைத்து, அரசின் மீது ஓர் எதிர்மறை பிம்பத்தைக் கட்டமைத்து வருகின்றனர். உண்மை யில் அப்படி நடக்கிறதா என்பது தொடர் விவாதத்தின் மூலம் பேசப்பட வேண்டியது.

எதிர்கொள்ளும் சவால்கள்
குறிப்பாக, ‘எல்லோருக்கும் எல்லாம் என்கிற பெரிய நீண்ட நெடிய போராட்டக்களம் அமைத்த தமிழ்நாட்டில், சமூகநீதியை நிலை நாட்டுவதற்கான போராட்டம் நீண்டது. அதே நேரத்தில் சாதிய சமூகத்தில் இன்னும் எச்சம் இருக்கும் சுவடுகளை நீக்குவதற்கான போராட்டமும் நெடியது.அந்தச் சாதிய சமூகத்தின் சீழ் பிடித்த கரங்களுள் ஆங்காங்கே சில சம்பவங்கள் நிகழ்வதை ஜனநாயக சக்திகள் எதிர் கொண்டுதான் வருகிறார்கள்.
திருநெல்வேலி அருகே நாங்குநேரியில் சின்னதுரை என்கிற மாணவன் சாதிய சமூகத்தின் கரங்களால் வெட்டப்பட்டபோது, ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் அவருக்கு ஆதரவாகவே நின்றன. அரசும் மாணவரின் பக்கம் நின்றது. தமிழ்நாடு அந்த அவரின் மொத்தக் கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டது. பாதிக்கப்பட்டவரின் பக்கம் அரசே நிற்பதனூடாகச் சொல்லும் செய்தி என்னவெனில், சாதிய சமூகத்தின் குற்றங்களை ஆதரிக்காது என்பதுதான்.
அதிலிருந்து மீண்டு வந்த மாணவன் தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அதன்பின் சில நிகழ்வுகளால் அவன் தனிப்பட்ட வன்முறைத் தாக்குதல் ஒன்றைச் சந்தித்தபோது, சின்னதுரை போன்ற மாணவர்கள் படித்து மேலே வர முடியாது. மீண்டும் சாதியைச் சொல்லி தாக்கப்பட்டார், அரசு வேடிக்கை பார்க்கிறது என விசாரணைக்கு முன்பே குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசுமீது சுமத்தி சிலர் பரப்பத் தொடங்கினர்.
சாதிய சமூகத்தில் தனிநபர் தாக்குதலாலும், அங்கு சின்னதுரை போன்றோரே பாதிக்கப்படும் தரப்பினராக இருப்பதை மறுக்க முடியாது. அந்தக் கோபத்தில்தான், சாதியக் கொடூரங்கள் நிகழ்வதை அரசு தடுக்கவில்லை என விமர்சிப்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதே நேரத்தில், சமூகப் படிநிலையை உயர்த்திப் பிடிக்கும், சாதிய சமூகத்தை ஆதரிக்கும் சக்திகள் வளர்ந்து வருவதைக் கண்டிக்கத் தவறுகிறோம்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை தியாகராஜா கல்லூரியில் மாணவர்களிடையே ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட வைத்த நிகழ்வின்போது, அவரது சாதிய வன்மத்தின் போது அரசைக் கண்டித்தவர்களில் எத்தனை பேர் ஆளுநரைக் கண்டித்தனர்? சனாதனமே இந்தியாவின் அடையாளம் என்றால், சாதியம் தான் அதன் ஆன்மா என்பதை அறியாதவர்களா அவர்கள்.
சனாதனமே சாதியை உறுதி செய்கிறது என்பதை விமர்சன பூர்வமாக அறிந்த பின்னரும், சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு எதிராக ஏன் மௌனமாக இருக்கிறார்கள் அந்த செயல்பாட்டாளர்கள் என்பதை கேட்கத் தோன்றுகிறது.
சமத்துவ நாள் கொண்டாட்டம்
கடந்த மாதத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கமிழ்நாடு அரசு கொண்டாடியது. சமத்துவ விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சில புள்ளி விவரங்கள்படி, அரசின் விலையில்லா பயணத் திட்டத்தில் பயன்பெறுவோரில் பெரும்பான்மையானவர்கள் தாழ்த்தப்பட்ட பட்டியலின மகளிர் என்கிற ஒரு குறிப்பை பேசினார். அப்படி அவர் பேசியதையே விமர்சன பூர்வமாக அணுகினார்கள் சில நண்பர்கள்.
தாழ்த்தப்பட்ட பெண்கள் மட்டும்தான் அந்தப் பயணத்தை பயன்படுத்துகிறார்களா? பிற்படுத்தப்பட்ட பெண்கள் பயன்படுத்த வில்லையா? ஏன் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் தனித்துப் பேசவேண்டும் என்கிற கேள்வியை முன்வைத்தனர். அப்படித் தனித்து காட்டப்பட வேண்டிய தேவை என்ன? என்கிற விமர்சனப் பார்வை அதில் இருந்தது. ஆனால், அது பொதுவான மேடையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர் என்று தனித்துப் பேசவில்லை. சமத்துவ நாள் விழாவில் அதன் மூலம் ஒரு செய்தியைச் சொல்கிறார் முதலமைச்சர்.
‘அனைத்துப் பெண்களுக்குமான திட்டத்தில் உழைக்கும் பெண்களில் பெரும்பான்மையான, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட மகளிர்’ என்பதைத் தொட்டுக்காட்டி அரசு அவர்களுக்குத் துணை நிற்கிறது என்கிறார். வாக்கு வங்கி அரசியலுக்கான, அந்த நேரத்து உரையாடல் அல்ல அது. சாதியச் சமூகத்தின் படிநிலைகளை உடைக்க உளப்பூர்வமாக பல வேலைகளை அரசு செய்து கொண்டிருப்பதை அறிவிப்பதாகத்தான் அந்தப் பேச்சு அமைந்திருந்தது.
அந்த நிகழ்வில், மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. அது என்ன வெனில், “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் தொகைத் திட்டம் என்கிற பெயரில் வெளிநாடுகளுக்குச் சென்று பயில்வதற்கான கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் குழுமி இருந்தனர்.
இதற்கு முன் கடந்த 15 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட பட்டியலின மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று பயில்வது எனில் அரசின் நிதி உதவி பெரிதாக எட்டியதில்லை. பயன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே என்பதும் அந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை வேறு திட்டங்களுக்கு மாற்றிவிடப்பட்டது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் சில மாதங்களுக்கு முன்பு ஊடகப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.கழக ஆட்சி அமைந்த பின்னர் அந்தத் திட்டத்தை சீர் செய்து, அரசின் வேறு சில திட்டங்களுடன் இணைத்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்களை வெளிநாட்டு உயர்கல்விக்குத் தயார் செய்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பட்டியலின மாண வர்கள் சமரசமற்று அவர்கள் விரும்பிய கல்வியை, விரும்பிய கல்வி நிறுவனத்தில் பெற அவர்களே தேர்வு செய்து அதற்கான உதவி தேவைக்கு விண்ணப்பிக்கலாம்.குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளில் 174 பேர் வெளிநாடுகளில் உயர் கல்விக்குச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு மீண்டும் 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மாத சமத்துவ நாள் நிகழ்வில் 60 பேர் உதவித்தொகை பெற்று முதலமைச்சரோடு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்ற நிகழ்வு, இதுவரை தமிழ்நாடு அறியாதது.
சாதியச் சமூகத்தால் பாதிக்கப்பட்ட சின்ன துரையின் கல்விக்கு அரசு துணை நிற்கும் என்பது சாதியச் சமூகத்துக்கு எதிராக அரசு நிற்பதன் உரத்த குரல் என்றால், அயல் நாட்டுக்குப் படிக்கச் செல்லும் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை என்பதும் சத்தம் இல்லாமல் நிகழ்த்தப்பட்டு வரும் அரவணைப்பு ஆகும்.
இந்த வாய்ப்பு ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்களுக்கு சரியாகச் சென்று சேர்கிறது எனில், பட்டியலின சமூகத்தில் நிகழும் சமூகப் பொருளாதார மாற்றங்கள் அளவிட முடியாதது. ஆனால், இது குறித்து ஏன் நாம் பேச மறுக்கிறோம்?
தாழ்த்தப்பட்ட மகளிர் விலையில்லா பயணத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுவிட்டார் என்று விமர்சனம் செய்யும் அதே வேளையில், தாழ்த் தப்பட்ட மாணவர்களில் 600 மாணவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இத்தாலி என்று பயில்வதற்குச் செல்வதை வரவேற்று ஒரு பதிவு செய்தார்களா? என்பதை தேடிப் பார்க்கவேண்டி இருக்கிறது.
இந்த சமநிலையற்ற தன்மை ஏன்? அதிகாரத்தை விமர்சிக்க வேண்டிய இடத்தில் விமர்சிப்பதும், சமூகநலத் திட்டங்களை வரவேற்க வேண்டிய இடத்தில் வரவேற்று உயர்த்திப் பிடிப்பதும்தானே சமநிலை.
சாதியச் சமூகத்தில் இருந்துவிட்டு விடுதலையாகத்தான் அண்ணல் அம்பேத்கர் கல்வியை பற்றிக்கொள் என்றார். சாதியச் சமூகத்தைக் கடந்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதற்கான முனைப்புதான் அண்ணல் அம்பேத்கர் பெயரிலான அயலக கல்வி உதவித் திட்டம் போன்றவை.
சின்னதுரை போன்றோர் மீதான சாதிய வன்மம் அகல இன்னும் நாம் வேலை செய்ய வேண்டி இருக்கும். அது சாதியச் சமூகத்தின் எச்சம். அவை வெட்ட வெட்டத் துளிர்க்கும். சனாதனம் உயிர்த்திருக்கும்வரை அதைத் தவிர்க்க முடியாது. ஆனால், சாதி சமூகத்தின் பிடியிலிருந்து அகல அரசு எடுக்கும் சிறு சிறு முயற்சிகளையும் நாம் கொண்டாடி உயர்த்திப் பிடிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். ஏனென்றால்; அவைதான் சாதியப் பிடி மானத்தை தளர்த்துவதற்கான வழி. இந்த ஆட்சி அதைச் செய்துகொண்டிருக்கிறது.