ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள 28 காவல் நிலைய எல்லையில் இரவு ரோந்து பணிகளை சீரமைத்து மேம்படுத்த இ-பீட் ஆப் மூலம் கண்காணிக்கப்படுவதாக ஆவடி காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவத்தில் தொலைந்து போன பொருட்களை மீட்டு உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 28 காவல் நிலைய எல்லைகளில் கடந்த ஓராண்டில் நடந்த கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு திருடு போன பொருட்கள் முறையாக பறிமுதல் செய்யப்பட்டன.
அதில் 185.3 சவரன் தங்க நகைகள்,398 செல்போன்கள் 4,67,500 ரொக்க பணம் மற்றும் 5.3 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது, அதனை ஆவடி காவல் ஆணையரக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் உரியவர்களிடம் ஆவடி காவல் ஆணையர் சங்கர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தது, உங்களுடைய திருடு போன பொருட்கள் உடனடியாக கண்டுபிடித்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆவடி காவல் ஆணையரக காவல்துறை துரிதமாக செயல்பட்டு திருட்டை கட்டுப்படுத்தவும் மற்றும் புகார் மனுதாரர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய எல்லையில் நடந்த கிருஷ்ணா நகை அடகு கடையில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஏற்கனவே 2 பேர் ராஜஸ்தானிலிருந்தும் 2பேர் சென்னையிலும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் எனவும்.
மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தி பறிமுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த நபரிடமிருந்து 30 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். தொடர்ந்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளை கைது செய்து மொத்தம் தொலைந்து போன பொருட்கள் எல்லாம் மீட்டெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் இரவு ரோந்து பணிகளை சீரமைத்து மேம்படுத்தப்பட்ட வாகனங்கள், பீட் இருசக்கர வாகனங்கள் மற்றும் ரோந்து காவல் துறையினர் செல்லும் இடங்களை கண்காணிக்க ஈ-பீட் ஆப் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும்.
ஒவ்வொரு இரவும் ரோந்து பணி முடிவதற்கு முன்னால் காலை 6:00 மணிக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் இரவில் நடந்த குற்ற சம்பவங்கள் எந்த இடங்கள் என்று தெரிந்துக்கொண்டு அங்கு சென்று காவலர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் எனவும் வங்கி, நகைக் கடைகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களை கண்காணித்து வருக்கிறார்கள் என ஆவடி காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.
பிடிவாரன் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்கள் எண்ணிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்கள் குறித்தும் அன்றே ஆய்வு நடத்தப்படுகிறது. இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்படுவதாகவும் இரவு நேரங்களில் ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
விசிபல் போலீஸ் என்கிற முறையில் காவலர்கள் நடந்தே ரோந்து பணியை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி தீவிர படுத்தப்பட்டு முழுவதுமாக குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.