சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சொத்தைப் பிரித்துக் கொடுக்க மறுத்த தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வைகுந்தம் ஊராட்சிக்குட்பட்ட வேடிச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னபழனி. விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு துரைசாமி, சுப்பிரமணி என இரு மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் துரைசாமி கடந்த 2018-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, சின்னபழனிக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தைப் பாகம் பிரித்துத் தருமாறு இளைய மகன் சுப்பிரமணி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், “மூத்த மகன் இறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் என்ன அவசரம்?” என்று கூறி சின்னபழனி நிலத்தைப் பிரிக்க மறுத்துள்ளார்.

தந்தை நிலத்தைப் பிரித்துத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம், தனது தந்தை சின்னபழனியை மண்வெட்டியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்துத் தகவலறிந்த சங்ககிரி போலீசார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுப்பிரமணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி இன்று (06-07-2026) பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். குற்றவாளி சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் துரிதமாகவும் முறையாகவும் விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்த சங்ககிரி காவல் துறையினரைச் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) நேரில் பாராட்டியுள்ளார்.
சோழவரத்தில் துணிகர கொள்ளை – பூட்டிய வீட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு!
