நாம் தமிழர் கட்சியில் இருந்து மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ரகு, மேச்சேரி ஒன்றிய செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மீதான அதிருப்தி காரணமாக பலர் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் சேலம் வடக்கு மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் ஜே.ரகு தலைமையில் 500 பேர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் ரகு வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், கட்சியில் 7 ஆண்டுகளாக பணியாற்றி தன்னுடைய இளமை காலங்களையும், பணம், உழைப்பு என அனைத்தையும் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கட்சியில் மாநில பொறுப்பில் இருந்து வரும் பாக்கியராஜ் மற்றும் தங்கள் தொகுதியின் முன்னாள் தொகுதி செயலாளர் மணிவண்ணன் ஆகியோர்களால் வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் ரகு குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்னும் வரவிருக்கும் பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள் ,ஒன்றிய பொறுப்பாளர்கள் என அனைவரும் வெளியே செல்வார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்றும், பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கு தான் இந்த கட்சியில் முன்னுரிமை உழைப்பாளர்களுக்கு இல்லை என்றும் வேதனையுன் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் என்று இல்லாமல் நான் மட்டுமே தமிழர் என்று இருக்கும் தொகுதி செயலாளர் மணிவண்ணன் செயல்படுவதாகவும் இதனால் தான் உள்பட 500 பேர் கட்சியில் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியிலிருந்து மேட்டூர் தொகுதி மேச்சேரி ஒன்றிய செயலாளர் மா.கார்த்திக் தலைமையில் 200 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், கட்சியில் 10 ஆண்டுகளாய் பயணித்து தன்னுடைய 40 சதவீத வாழ்க்கையை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தான் பயணித்த நாம் தமிழர் கட்சியை குறை சொல்லி நேரத்தை வீண் அடிக்க விரும்பவில்லை என்றும், தான் தமிழ் தேசிய பாதையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பயணிப்பதாக முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.