கடந்த 15 ஆண்டுகளாக ரேபரேலி மக்களவை எம்.பியாக உள்ள சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டது.
ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைவதால் ராகுல் காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தியின் தாயும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேட்பு மனுவை தாக்கல் செய்த ராகுல் காந்திக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் ஏற்கனவே வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், தற்போது போட்டியிடும் ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.