வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக எம் எல் ஏ முருகேசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போது முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முருகேசன் போட்டியிட்டார். அப்போது அவருக்கு வாக்களிப்பதற்காக வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறி 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 9 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி எம் எல் ஏ முருகேசன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முதுகுளத்தூர் தொகுதி திமுக எம் எல் ஏ முருகேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பணம் பட்டுவாடா செய்த நபர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தன் பெயரை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக வாதம் வைக்கப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, கைது செய்யப்பட்ட 3 பேருக்கும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், திமுக வேட்பாளருக்கும் தொடர்பு உள்ளது எனக் கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறி, எம் எல் ஏ முருகேசன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
பெரியார் எனும் மாமருந்து நோயை போக்க உதவும் – துணைமுதலமைச்சர் உதயநிதி



