நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகி உள்ளார்.
சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்த நீதிபதி, சாட்சிய விசாரணக்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றியிருந்தார்.
இதையடுத்து நடிகர் வடிவேலு சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். சிங்கமுத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், வடிவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதை பதிவு செய்ய வேண்டும் எனவும் இரண்டு வார காலம் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதை பதிவு செய்துகொண்ட மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதாக, அங்கே முறையீட்டு கொள்ளுங்கள் உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளார்.