காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு அனுப்பியதாக நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளர் தாக்கல் செய்துள்ளார். காஞ்சிபுரத்தில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதாகக் கூறி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல், டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி, டிஎஸ்பி மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் ஆகியோர், மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, சம்பவம் தொடர்பான புகாரை விசாரிக்க விஜிலன்ஸ் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் நீதிபதி செம்மல் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே காஞ்சிபுரம் டிஎஸ்பியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது தெரிய வந்தது. மேலும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்துள்ள நிலையில், நீதிபதி செம்மல் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


