யானைகவுனி பகுதியில் பழைய தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி, நகை கடை உரிமையாளரிடம் ரூ.12 லட்சம் ஏமாற்றிய நபர் கைது.

சென்னை, சௌகார்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஆனந்த், அதே பகுதியில் கடந்த 8 மாதங்களாக நகைகடை வைத்து நடத்தி வருகிறார். ஆனந்திற்கு அறிமுகமான பாபு என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வங்கியில் இருந்து ஏலம் விடப்படும் பழைய தங்கநகைகளை வாங்கி வந்து, அதற்கான கமிஷனுடன் கூடிய பணத்தை ஆனந்திடமிருந்து பெற்று கொண்டு புரோக்கர் வேலை செய்து வந்துள்ளார். பாபு வழக்கம் போல தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி, ரூ.15 லட்சம் பணத்தை ஆனந்திடமிருந்து வாங்கிச் சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு பின்னர் ஆனந்த் கொடுத்த பணத்திற்கான தங்க நகைகளை பாபுவிடம் கேட்டபோது, பிறகு தருவதாக கூறிவிட்டு, செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு பாபு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து ஆனந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தாா்.
ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த யானைகவுனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 28.04.2025 அன்று பாபு என்பவர் பணம் ரூ.3 லட்சத்தை ஆனந்திடம் கொடுத்துள்ளார். மேலும் மீதி 12 லட்சம் பணத்தை தராமல் ஏமாற்றி வந்த பாபுவை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட பாபு மேற்படி ஆனந்த் உட்பட தங்கநகை வியாபாரம் செய்து வரும் சிலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பாபு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.