காற்று மாசுபாட்டை குறைத்தால், இந்தியர்களின் ஆயுட் காலம் சுமார் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.மேலும், இதுகுறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு காற்று மாசுபாடு அதிகமாக இருந்தது. இது உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டுதலைவிட 8 மடங்கு அதிகம் ஆகும். காற்று மாசுப்பாட்டை உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப நிரந்தரமாக குறைத்தால், இந்தியர்களின் சராசரி ஆயுள்காலத்தில் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்.
இந்தியாவில் மிகுந்த காற்று மாசுபாடு கொண்ட மண்டலமாக வடக்கு சமவெளி உள்ளது. மோசமான காற்று மாசுப்பட்டால் டெல்லி மக்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறைகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி காற்று மாசுபாடு குறைந்தால், அங்குள்ள மக்களின் சராசரி ஆயுள்காலம் 5 ஆண்டுகள் அதிகரிக்கும். உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு குறைந்தால், டெல்லி பெரும் பலனடையும். காற்று மாசுபாடு குறைந்தால் ராஜஸ்தான் மக்களின் ஆயுள்காலம் 3.3 ஆண்டுகள் அதிகரிக்கும். மத்தியப் பிரசே மக்களின் ஆயுள்காலம் 3.1 ஆண்டுகள், மகாராஷ்டிர மக்களின் ஆயுள்காலம் 2.8 ஆண்டுகள் அதிகரிக்கும்” என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
