வெளிநாட்டில் ஆபத்தான நிலையில் இருந்தவர் மீட்பு – தமிழக அரசு நடவடிக்கை
பக்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்தார். தமிழக அரசின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி (25) பக்ரைன் நாட்டுக்கு சென்று வேலை செய்தபோது வாகன விபத்தில் சிக்கி நான்கு மாதமாக மீட்க முடியாமல் இருந்த நிலையில் வீரபாண்டியின் பெற்றோர் வெளிநாடு வாழ் தமிழர் நலதுறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்த பிறகு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை மீட்டு தமிழகம் வரவைத்து சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வெளிநாடு தமிழர் நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து அரசு சார்பாக நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்,
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக பக்ரைன் சென்ற இடத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக இன்றைக்கு உயிருக்கு போராடக்கூடிய நிலையில், தந்தை சுப்பையா மற்றும் தாய் அழகி இருவரும் நேரடியாக தன்னுடைய மகனின் நிலையை தெரிவித்தனர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்த சகோதரனை அங்கிருந்து மீட்டு தமிழக அரசு சார்பாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்றைக்கு அனுமதிக்கப்பட்டு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும் நிலையில் முதலவர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதற்கு உறுதுணையாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேவையான வசதிகளை செய்து வருகின்றார். எனவே வீரபாண்டி உடல் நலம் குணமாக இந்த மருத்துவம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.
தொடர்ந்து பேசிய அவர், விமான நிலையத்திலிருந்து அவரை பார்த்தற்கும் தற்போது மருத்துவமனையில் பார்ப்பதற்கும் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார், மருத்துவர் குழுவை அமைத்து அவருக்கு தனியாக கவனம் செலுத்தி வருகின்றனர். சிறப்பான முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் 2017 வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பான நிலை வேண்டும் என்று ஒரு ஆணையும் அமைத்தார். அங்கே வேலைக்காக சென்றவர்கள் உயிரிழக்க நேரிடும் நிலையில் அவர்கள் உடல்கள் இங்கு எடுத்துவரப்பட்டு அவர்கள் பெற்றோர் இடத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது.
இதற்கு தனித் துறை இருக்கும் காரணத்தினால் சூடான், இந்தோனேசியா, உக்ரைன், துபாய் போன்ற நாடுகளில் வேலைக்கு சென்று சிக்கித் தவிப்பவர்களின் நிலையை அறிந்தால் அவர்களை மீட்டு வர அயலர்கள் தமிழர்கள் நல வாரியம் என்று தனி வாரியமே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சரின் (செஞ்சி மஸ்தான்) சொந்த செலவில் இருந்து 50,000 ரூபாய் வீரபாண்டியன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து வீரபாண்டியின் தாய் அழகி பேசுகையில், ”என் மகனை பக்ரைன் நாடுக்கு அனுப்பினோம் அவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் அமைச்சர் மூலமாகமாக ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் சொந்த செலவில் 50000 வழங்கினார். தற்போது வீரபாண்டி நல்ல முன்னேற்றத்துடன் நலமாக உள்ளதாக தெரிவித்தார்”.