2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினையை, பிரபாகரனை முன்னிறுத்தி சீமான் செய்யும் மோசடிகள் குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு ஆருஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இலங்கை இறுதிப் போரின்போது பிபிசி, டைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகவியளாளர்களுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் நடேசன், புலித்தேவன் போன்றோர் தொலைபேசியில் அழைத்தனர். இதேபோல் கொழும்புவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொலைபேசியில் அழைத்தோம். எப்படியாவது இறுதி நேரத்தில் மக்களை காப்பாற்றுவதற்காகவும். தங்களுக்கு கிடைத்த எல்லா அரசியல்வாதிகளையும், அனைத்து ஊடகவியலாளர்கள், தொண்டு நிறுவனங்களையும் அணுகினர். ஐ.நா. சபையில் இந்தியாவின் சார்பில் விஜய் நம்பியார் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார். அவரை கூட அணுகினோம். போரை நிறுத்தி மக்களை காப்பாற்றவும், காயம் பட்டவர்களை கொண்டுசெல்லவும் ஒரு உதவியாக கேட்கப்பட்டது. அப்படி உதவி கேட்கப்பட்டவர்களில் ஒருவர்தான் சீமான். விடுதலைப் புலிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள உதவி கேட்கவில்லை. அதனால்தான் போரில் சரணடைய சொன்னபோதும் அவர்கள் கேட்கவில்லை.
விடுதலைப்புலிகள் எப்போதும் இந்தியாவுடன் உறவை பேணி கொண்டிருந்தார்கள். 1987ல் இந்திய ராணுவத்துடன் போர் முன்பும், பின்னரும் இந்தியாவின் ரா அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தோம். இந்திய ராணுவத்துடன் போர் தொடங்கிய போது சென்னையில் இருந்த விடுதலைப் புலிகள் நாங்கள் இந்திய ரா அதிகாரிகளுடன் தொடர்பை தொடர வேண்டுமா? என கேட்டனர். அப்போது உறவை பேணுங்கள் என்று பிரபாகரன் சொன்னார். அதனை சீமான் போன்றோர் தங்கள் உள்ளக அரசியலுக்காகவும், எதிரிகளை வீழ்த்தவும் ஈழத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்.
சேரலாதன், விடுதலைப்புலிகள் அமைப்பின் திரைப்படத்துறையின் தலைவராக இருந்தார். மணிரத்னம் இயக்கிய கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படம் ஈழத்தமிழர்களின் பிரச்சினை அடிப்படையாக கொண்டது. ஆனால் அந்த படம் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கருத்துக்கள் சொல்லப்படவில்லை என்று பிரபாகரன் ஆதங்கத்தை தெரிவித்தார். எங்கள் வலிகளையும், எங்கள் மக்கள் படும் துயரங்களை வெளிப்படுத்த இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலரை அணுகி இருந்தனர். சீமானும் ஒரு இயக்குநர் என்பதால்தான் வந்திருந்தார். எல்லாளன் படப்பிடிப்பு தளத்திற்குதான் சீமான் போயிருந்தார். அப்போது படப்பிடிப்பிற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிடுவதால் அவர் என்ன செய்ய போகிறார். அவர் இலங்கையில் வந்து சிங்கள ராணுவத்தை எதிர்த்து போரிட போகிறாரா? அல்லது வடக்கில் இப்போதும் நிலைகொண்டுள்ள ராணுவத்தை கலைக்க போகிறாரா, அல்லது ஆயிரம் பேருக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவாரா?. சீமான் முதலமைச்சராக வந்தாலும் கூட இந்தியாவின் சட்டங்களை மீறி ஒன்றும் செய்துவிட முடியாது. அது எல்லோருக்கும் தெரியும்
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டு எங்கள் வளங்களை குவித்து, விதிபலத்துடன் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம். இது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் ஒரு கட்சியை நடத்திக்கொண்டு ஈழத்தமிழர்களுக்கு போராடி ஒன்றை பெற்றுத்தர முடியாது. அவர் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கே உரிமையை பெற்றுத்தர முடியாதவர். ஐ.நா. சபையில் கூட அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆக பேசுவது ஒன்று, படங்களை காட்டுவது ஒன்று. அதனை நாங்கள் இன்னும் நம்பி கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறார் போல. சீமானால் ஈழத்தமிழர்களுக்கு நன்மை எதுவும் இல்லை என்பதை விட அவரால் எங்களுக்கு ஏற்பட்ட அழிவு என்பது அதிகம். கடுமையான பிரச்சாரம் முலம் சீமான் என்ற மாயையில் இருந்து மக்களை கொண்டுவர வேண்டும். 15 வருடங்களை இழந்தது போல இனிவரும் வருடங்களை இழக்கப்போவது இல்லை. புலம்பெயர் தமிழர்களிடம் சீமானுக்கு முன்பை போன்ற ஆதரவு இப்போது இல்லை. இன்னும் கொஞ்சம் உள்ளது அதையும் மெல்ல அகற்றிவிட்டால் போதும். சீமான் தமிழக அரசியலை தமிழகத்தில் பார்க்கட்டும் அதில் பிரச்சினை இல்லை. அதற்குள் எங்களை கொண்டு செல்ல வேண்டாம். நாங்கள் இந்திய அரசியலில் ஈடுபடுவதில்லை. எங்களை பொருத்தவரை இந்திய அரசியல் உள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றுதான். கடந்த 15 வருடங்களில் ஈழத்தமிழர்களுக்கு சீமானால் எதுவும் நடைபெவில்லை.
சீமான், தனக்கான செல்வாக்கு குறையும்போது இவ்வாறு புகைப்படங்களை வெளியிடுவது, விடுதலைப்புலிகளை இழுப்பது என்பது மக்கள் சுதாரித்துக்கொண்டு வெளியேறுவதை தடுப்பதற்காக முயற்சியாக உள்ளது. ஒன்று தெளிவானது இந்திய கட்சிகள் ஊடாக ஈழத்தில் எந்த ஓரு போராட்டத்தையும் நடத்த முடியாது. ஆனால் இது மாயை என்பதும் எங்களுக்கும் தெரியும். ஆனாலும் சீமான் இப்போதும் அதனை தூக்குகிறார். சீமானை பொருத்தவரை தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்ய முடியும். இலங்கையில் ஜேவிபி கட்சி ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்றால், அவர்களுடைய அரசியலை மக்களுக்கு செய்தனர். அதேபோல் சீமானும் அதேபோல தமிழக மக்களுக்கு செய்து மேலே வந்திருக்கலாம். ஆனால் 15 வருடங்களாக தமிழகத்தில் அவர் கட்சி வளரவில்லை. அப்படி என்றால் அதில் கவனத்தை செலுத்தாமல் ஈழத்தமிழர்களை இழுக்கிறார் என்றால் அவர் அஜெண்டாவுடன் இயங்குகிறார் என்பதுதான் அர்த்தம், இவ்வாறு அருஷ் தெரிவித்தார்.