சென்னை – கோவை வந்தே பாரத் ரயில்- 5.40 நிமிடத்தில் வந்தடைந்தது
சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று காலை சென்னையில் துவங்கி சுமார் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் கோவை ரயில் நிலையம் வந்தடைந்தது.
இந்தியாவில் அதிவேக ரயில்களை இயக்கம் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதிநவீன வசதிகளுடன் விரிவான பயணத்தை மேற்கொள்ளும் இந்த வந்தே பாரத் ரயிலானது இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 முக்கிய வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் சேவையாக டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் தொடங்கிய இந்த வந்தே பாரத் ரயில் சேவை பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை – கோவை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்ததையொட்டி, சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. காலை சென்னை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தில், குறிப்பிட்ட கால நேரமான 9.15 மணிக்கு முன்பாக 9.10 மணிக்கு ரயில் சேலம் நிலையத்தை வந்து அடைந்தது. சேலம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த வந்தே பாரத் ரயிலை ரயில்வே கோட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
சென்னை- கோவை வழித்தடத்தில் குறைந்த ஸ்டேஷன்களில் மட்டும் நின்று செல்லும் வகையில் குறிப்பாக சேலம் ,ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று ஸ்டேஷன்களில் மட்டும் நின்று செல்லும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் கோவையில் 6:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 12 .10 மணி அளவில் சென்னையை சென்றடையும் வகையிலும், அதே போன்று மறு மார்க்கத்தில் சென்னையில் மதியம் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயிலானது ,சேலம் ரயில் நிலையத்திற்கு மாலை 6:03 மணிக்கு வந்து சேரும்.
இதேபோன்று ஈரோட்டிற்கு இரவு 7.03 மணிக்கு திருப்பூருக்கு இரவு 7. 43 மணிக்கு கோவையை இரவு 8:30 மணிக்கு சென்றடையும் வகையில் கால அட்டவணை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 11.18 மணி அளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.