spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் விளையாட்டுகள்: “அரசு மௌனம் காக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்!

ஆன்லைன் விளையாட்டுகள்: “அரசு மௌனம் காக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்!

-

- Advertisement -

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேரக்கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்த விதிமுறைகளை அனைத்தும் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆன்லைன் விளையாட்டுகள்: “அரசு மௌனம் காக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிர்ஷ்டத்துக்கான ஆன் லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது.

we-r-hiring

அதேசமயம், திறமைக்கான ஆன் லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த சட்டத்தின் கீழ் ஆன் லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து 2025 பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த விதிகளை செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

அந்த தீர்ப்பில், ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விதிகள் மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லை. நிபுணர் குழுவின் அறிக்கையில் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இந்த ஒழுங்குமுறை விதிகள் உடனடி தேவையாகிறது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் அமலுக்கு வராத நிலையில், வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனது ஆளுமைக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பு கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அரசு முறைப்படுத்த முடியும். மக்கள் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகும் போது அரசு மௌனம் காக்க முடியாது” எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். “இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொழில் புரியும் உரிமை வழங்கி உள்ள போதிலும், அதற்கு நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. தொழில் புரியும் உரிமையை மக்கள் வாழ்வுரிமையை பாதிக்கும் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது” என கூறி இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு, ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும், சமூகத்திற்கும் ஒரு பெரிய ஆறுதலை அளித்துள்ளது. இத்தீர்ப்பு, ஆன்லைன் விளையாட்டுகள் மீதான அரசின் பிடியை மேலும் இறுக்குவதோடு, கட்டுப்பாடற்ற ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தும் சீரழிவுகளைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய முன்னுதாரணமாகவும் அமைகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை, பிற மாநிலங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னட மொழி குறித்து கமல்ஹாசனின் கூற்றுக்கு – எம்.பி. ரவிக்குமார் விளக்கம்…

MUST READ